தவெக அமைச்சரவை விரிவாக்கம்… 23 அமைச்சர்கள் பதவியேற்பு..!
தமிழ்நாடு அமைச்சரவையில் புதிதாக 23 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். அவர்களுக்கு புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், 108 இடங்களில் வெற்றி பெற்ற விஜயின் தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐயுஎம்எல் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.
அதைத் தொடர்ந்து சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கில் கடந்த 10 ஆம் தேதி நடைபெற்ற பதவியேற்பு விழாவில் முதலமைச்சராக விஜய் பதவியேற்றுக் கொண்டார். என்.ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், வெங்கடரமணன், அருண்ராஜ் உள்பட 9 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். அவர்களுக்கான இலாகாக்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டன. எனினும், மீதமுள்ள பல துறைகளுக்கான அமைச்சர்கள் நியமிக்கப்படாமல் இருந்தனர்.
இந்நிலையில், தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுவதாக ஆளுநர் மாளிகை அறிவித்தது. அதன்படி, ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். முதல் ஆளாக விஜய்யின் நண்பர் தூத்துக்குடி தொகுதி எம்எல்ஏ ஸ்ரீநாத் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். ஆண்டவன் மீது ஆணையிட்டு என்று உறுதிமொழி எடுத்து ஸ்ரீநாத் பதவியேற்றார். அதன்பின் ஒவ்வொருவராக பதவியேற்று வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து இருவர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். குறிப்பாக தவெக அமைச்சரவையில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த 6 பேர் இன்று அமைச்சர்களாக பதவியேற்றனர். அதேபோல் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த 3 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். சென்னையில் கூடுதலாக ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏ மரிய வில்சன், வேளச்சேரி தொகுதி எம்எல்ஏ குமார் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
முன்னதாக, விழாவில் முதலில் வந்தே மாத்ரம் பாடல் பாடப்பட்டது. முதலமைச்சர் பதவியேற்பு விழாவின் போது வந்தே மாத்ரம் பாடல் பாடப்பட்டதும் தமிழ்த்தாய் வாழ்த்து கடைசியாக பாடப்பட்டதும் சர்ச்சையானது. இந்த சூழலில் தான் இன்று அமைச்சர்கள் பதவியேற்பு விழாவிலும் அதேபோல், முதலில் வந்தே மாத்ரம், இரண்டாவதாக தேசிய கீதம், கடைசியாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடலும் பாடப்பட்டது.





