தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் : 1430 பேருக்கு பாதிப்பு … உயிரிழந்தோர் 13 பேர்!!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1430 பேர் கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளான நிலையில் 13 உயிரிழந்துள்ளனர். 1453 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பும் உயிரிழப்பும் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1430 பேர் கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளான நிலையில் இதுவரையிலான மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்து 79 ஆயிரத்து 046 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து கட்டுக்குள் உள்ளது. இன்று ஒரே நாளில் 13 பேர் மட்டும் உயிரிழந்துள்ளனர். இதில் பல்வேறு தனியார் மருத்துவமனையில் 7 பேரும், அரசு மருத்துவமனைகளில் 6 பேரும் உயிரிழந்துள்ளனர்.சென்னையில் 5 பேரும், கோவையில் 4 பேரும் உயிரிழந்த நிலையில், தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்து 694 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையிலும் தினசரி கொரோனா பாதிப்பு மளமளவென சரிந்து வருகிறது. இன்று ஒரே நாளில் 393 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், சென்னையில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 14 ஆயிரத்து 577 ஆக உயர்ந்துள்ளது. இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 1453 ஆகும். இன்னும் சிகிச்சையில் இருப்போர் 11 ஆயிரத்து 073 பேர் எனவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.






