--- --:--:-- --

தமிழ்நாடு முழுவதும் இன்று ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம்!

11

பொது விநியோக திட்ட பயன்களை எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் இன்று (டிச.13) ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் ரேஷன் அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் உள்ளிட்ட சேவைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ரேஷன் கடைகளுக்கு சென்று பொருள் வாங்க இயலாத மூத்த குடிமக்களுக்கு குறைதீர் முகாமில் அங்கீகார சான்று வழங்கப்படுகிறது.

 

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், “பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் பிரதி மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி டிசம்பர் 2025 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் இன்று (13.12.2025) காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது.

 

குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும், நியாய விலைக் கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும். பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

 

சென்னையிலுள்ள 19 மண்டல அலுவலகப் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இச்சேவையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.” என்று அதில் தெரிவிக்கப்பட்டது.

Right Menu Icon