திருவாடானை நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு..!
திருவாடானை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகமே விரைந்து நடவடிக்கை எடு “தொண்டி பேரூராட்சி புடனவயலில் செயல்படுத்தப்படும் சமூக புறக்கணிப்பை உடனே தடுத்து நிறுத்து, கோவில் பொது நிகழ்வில் பாதிக்கப்பட்டோர் பங்கெடுப்பை உறுதி செய், தனி மனித உரிமையை மறுத்து ஊர் விலக்கம் செய்யும் நடைமுறையை தடுத்து ஒற்றுமையை நிலை நாட்டு, தனிப்பட்ட முரண்களை ஊர்பகையாக்கி அரசியல் லாபம் பெற துடிக்கும் நபர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடு” என்று தியாகி இம்மானுவேல் பேரவை முகவை மாவட்டம் என்றும் அச்சிடப்பட்டு ஒட்டப்பட்டுள்ளது.
இது பற்றி விசாரித்த போது புடனவயல் கிராமத்தைச் சேர்ந்த அருளானந்த் மகன் செபஸ்திராஜ் இவர் இதே பகுதியில் வசித்து வரும் நிலையில் அந்த ஊரில் உள்ள செபஸ்தியார் ஆலய திருவிழா நடைபெற உள்ளது.
அதற்கு வரி வாங்காமல் இவரை புறக்கணித்து உள்ளதாகவும் இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி ஊரை விட்டு விலக்கி வைத்திருப்பதாகவும் அதனால் இவரது மாமனார் கடந்த சில நாட்களுக்கு முன் இறந்த கூட்டத்திற்கு கூட ஊரிலிருந்து யாரும் செல்லவில்லை என்றும் இவரது வீட்டிற்கு தண்ணீர் கொண்டு செல்லக்கூடாது எனவும் இவரை ஊரைவிட்டே தள்ளி வைப்பதாகவும் கூறி அதற்கு உரிய நடவடிக்கை புகார் மனு அனுப்பியும் இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.
அதனால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. இதனால் பரபரப்பு நிலவுகிறது.






