100 நாள் வேலை திட்டத்தைச் சிதைக்கும் ஒன்றிய பாஜக அரசு – முதலமைச்சர்
மூன்று வேளாண் சட்டங்கள், சாதிவாரி கணக்கெடுப்பு போன்றவற்றில் எப்படி பின்வாங்கினீர்களோ, அதேபோல MGNREGA-வைச் (மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்) சிதைக்கும் முயற்சியிலும் மக்கள் உங்களை நிச்சயம் பின்வாங்க வைப்பார்கள் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கிராமப்புற வறுமையை ஒழிப்பதற்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை மத்திய அரசு கடந்த 2005-ஆம் ஆண்டு இயற்றியது. இந்த திட்டத்தின் கீழ், நீர் பாதுகாப்பு, நில மேம்பாடு, கிராமப்புற சாலைப் பணிகள், கால்நடை நீர் திட்டங்கள் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தற்போது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரை மாற்றுவதற்கான மசோதா இந்த குளிர்கால கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. பெயர் மாற்றத்துடன், இத்திட்டத்தில் சில முக்கிய சீர்திருத்தங்களும் முன்மொழியப்பட்டுள்ளன.
இந்நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு.தேசத்தந்தை காந்தியடிகளின் மீதுள்ள வன்மத்தால் அவர் பெயரைத் தூக்கிவிட்டு, வாயில் நுழையாத வடமொழிப் பெயரைத் திணித்திருக்கிறார்கள். 100% ஒன்றிய அரசின் நிதியில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டத்துக்கு இனி 60% மட்டுமே நிதி ஒதுக்குவார்களாம்.
இவை அனைத்துக்கும் மேலாக, நாட்டிலேயே வறுமையை முழுமையாக ஒழித்துச் சாதனை படைத்துள்ளதற்காகவே நம் தமிழ்நாடு தண்டிக்கப்படவுள்ளது. வறுமை இல்லாத மாநிலம் என்பதற்காக, இருப்பதிலேயே குறைவாகத்தான் இத்திட்டத்தின் பயன்கள் தமிழ்நாட்டு மக்களுக்குக் கிடைக்குமாம்.
பல கோடிப் பேரை வறுமையின் பிடியில் இருந்து மீட்டு, மாண்புடன் வாழ வழிவகுத்த ஒரு திட்டத்தை ஆணவத்துடன் அழிக்கப் பார்க்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு. மூன்று வேளாண் சட்டங்கள், சாதிவாரி கணக்கெடுப்பு போன்றவற்றில் எப்படி பின்வாங்கினீர்களோ, அதேபோல MGNREGA-வைச் (மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்) சிதைக்கும் முயற்சியிலும் மக்கள் உங்களை நிச்சயம் பின்வாங்க வைப்பார்கள். எனவே, மக்களின் சீற்றத்துக்கு ஆளாகாமல் இப்போதே VBGRAMG திட்டத்தைக் கைவிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.






