ஈரோடு நாகமலை குன்றை அறிவித்தது அரசு!
பல்லுயிர் பாதுகாப்பை நோக்கிய ஒரு முக்கிய நடவடிக்கையாக, ஈரோடு மாவட்டத்தில் உள்ள நாகமலை குன்றை மாநிலத்தின் நான்காவது பல்லுயிர் பாரம்பரிய தலமாக (BHS) தமிழக அரசு அறிவித்துள்ளது. இது பல்லுயிர் பாதுகாப்பு சட்டம், 2002-ன் விதிகளின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மதுரை மாவட்டத்தில் உள்ள அரிட்டாபட்டி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காசம்பட்டி, மற்றும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஏழத்தூர் ஏரி ஆகியவை பல்லுயிர் பாரம்பரிய தளங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
32.22 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த நாகமலை குன்று, ஒரு முக்கியமான சூழலியல் வளமையம் ஆகும். இது வலசை போகும் மற்றும் உள்ளூர் பறவைகள், நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் பல்வேறு ஈரநிலச் சூழல் அமைப்புகளுக்கு ஒரு முக்கிய வாழ்விடமாகத் திகழ்கிறது. ஆழமான நீர் பகுதிகள், ஆழமற்ற ஓரங்கள், சேற்றுப் பகுதிகள் மற்றும் பாறை முகடுகளைக் கொண்ட இதன் நிலப்பரப்பு, வளமான பல்லுயிர்களை ஆதரிப்பதாக அதிகாரப்பூர்வ வெளியீடு தெரிவித்துள்ளது.
சமீபத்திய ஆய்வுகள், குறிப்பாக தமிழ்நாடு ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு (2024), இந்தக் குன்றில் உள்ள பல்லுயிர் செறிவை ஆவணப்படுத்தியுள்ளன. மொத்தம் 138 தாவர இனங்கள் (125 இருவித்திலைத் தாவரங்கள் மற்றும் 13 ஒருவித்திலைத் தாவரங்கள்), 118 பறவை இனங்கள் (இதில் 30 வலசை போகும் பறவை இனங்கள் அடங்கும்), 7 வகையான பாலூட்டிகள், 11 வகையான ஊர்வன, 5 வகையான சிலந்திகள், 71 வகையான பூச்சியினங்கள் போன்றவை இங்கு கண்டறியப்பட்டுள்ளன.
இங்கு காணப்படும் முக்கிய பறவை இனங்களில் சில புள்ளிப் பெரும் கழுகு , மங்கிய பூநாரை மற்றும் போனெல்லியின் கழுகு ஆகியவை அடங்கும். சூழலியல் மதிப்பிற்கு கூடுதலாக, நாகமலை குன்று குறிப்பிடத்தக்க தொல்லியல் மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது. இரும்பு காலத்தில் அமைக்கப்பட்ட வட்ட வடிவக் கல்லறைகள், பாறை குகைகள் மற்றும் பழங்காலப் பொருட்கள் போன்ற கண்டுபிடிப்புகள் இதன் நீண்ட வரலாற்றை வெளிப்படுத்துகின்றன.
தொல்லியல் துறையால் பதிவு செய்யப்பட்ட, சுமார் 400 ஆண்டுகள் பழமையான ஆஞ்சநேயர் சிலைச் செதுக்கல் ஒன்று, இதன் கலாச்சார பாரம்பரியத்தை மேலும் வலியுறுத்துகிறது என்று அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பு கூறுகிறது. பல்லுயிர் பாரம்பரிய தளங்கள் (BHS) என்பவை தனித்துவமான, சூழலியல் ரீதியாக மிகவும் பலவீனமான, மற்றும் பல்லுயிர்களில் செழுமை வாய்ந்த நன்கு வரையறுக்கப்பட்ட பகுதிகளாகும்.
இவை அரிய, அச்சுறுத்தலுக்கு உள்ளான, மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த உயிரினங்களைப் பாதுகாக்க உதவுகின்றன. மேலும், பரிணாம முக்கியத்துவம் வாய்ந்த தளங்களைப் பாதுகாப்பதுடன், இயற்கையுடன் நமது கலாச்சாரத் தொடர்புகளை வலுப்படுத்தவும் உதவுகின்றன.





