தேர்தல் முறையாக நடத்துவதை தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்த வேண்டும்..!
வாக்குச்சாவடிகளை கைப்பற்றுதல், கள்ள ஓட்டு போடுதல் மின்னணு வாக்கு இயந்திரத்தில் மோசடி செய்தல் போன்றவை இல்லாமல் தேர்தல் நடத்துவதை தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
15 ஆண்டுகள் பழமையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்த கூடாது என உத்தரவிட வேண்டும். வாக்குகள் பதிவான இயந்திரங்கள் வைக்கப்படும் பாதுகாப்பு அறைகளில் ஜாமர் பொருத்த வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்திடம் கடந்த வாரம் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டது.
மனு மீது நடவடிக்கை எடுக்காததால் சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்தது. வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அவர்கள் முன் விசாரணைக்கு வந்தது. வாக்குச் சாவடிகளிலும் வெப் கேமரா பொருத்துவது சாத்தியமில்லை என்றும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் பொருத்தப்படும் எனவும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அரசியல் கட்சிகளுடன் ஆலோசித்து பதற்றமான வாக்குச்சாவடிகள் இந்த வாரத்திற்குள் கண்டறிய வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மனுதாரரின் கோரிக்கை குறித்து வரும் 29 ஆம் தேதி தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தேர்தல் நேர்மையாகவும் நியாயமாகவும் நடைபெறுகிறது என்பதை வாக்காளர்கள் திருப்தி அடையும் வகையில் தேர்தல் நடைபெற வேண்டும் என வலியுறுத்தினர்.






