திருமங்கலம் அருகே பதற்றம்! இரு தரப்பினரிடையே மோதல்-நான்கு பேர் காயம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே இரு தரப்பினரிடையே மோதல் வெடித்தையடுத்து போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
திருமங்கலம் அடுத்த எஸ். வலையப்பட்டி கிராமத்தில் கடந்த மாதம் முத்தாலம்மான் கோவில் விழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. சமரச முயற்சிகளால் இப்பிரச்சனை சற்று தணிந்து இருந்த நிலையில் நேற்று குடிநீர் குழாய் வால்வை திறப்பதில் மீண்டும் மோதல் வெடித்தது. தங்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதாக ஒரு பிரிவினர் காவல் துறையிடம் புகார் அளித்ததால் ஆத்திரமடைந்த மற்றொரு தரப்பினர் குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர்.
இரு சக்கர வாகனங்களும் வீட்டிலுள்ள பொருட்களும் அடித்து நொறுக்கப்பட்டன. இத்தாக்குதலில் நான்கு பேர் காயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 10 க்கும் மேற்பட்டோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த மோதல் காரணமாக அங்கு பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கபட்டுள்ளனர்.






