குழந்தையை கடத்திச் சென்ற இளம்பெண் கைது
திருப்பூரில் குழந்தையை கடத்தி சென்ற இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் அரசன் காடு பகுதியைச் சேர்ந்த சுடலை ராஜன் என்பவர் மனைவியை விட்டு பிரிந்து வாடும் நிலையில் தனது இரண்டரை வயது குழந்தையை காப்பகத்தில் சேர்த்துள்ளார்.
இந்த நிலையில் சுடலை ராஜனின் தந்தை மாரியப்பன் காப்பகத்தில் இருந்த குழந்தையை பழனி கோவிலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அறிமுகமில்லாத இளம்பெண்ணை வீட்டு வேலை செய்வதற்காக அழைத்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 24ஆம் தேதி மாலை குழந்தையுடன் அந்த இளம்பெண் மாயமாகியுள்ளார்.
இதுகுறித்து சுடலை ராஜன் பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து போலீசார் 3 தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையை துவங்கினர். நேற்று இரவு ஈரோடு பேருந்து நிலையத்தில் குழந்தையுடன் அந்த பெண் இருப்பதை கண்ட போலீசார் அவரை கைது செய்தனர்.
மேலும் குழந்தையை மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் குழந்தையை கடத்தி சென்ற பெண் சேலம் மாவட்டத்தை சேர்ந்த அல்போன்ஸ் மேரி என்பது தெரியவந்துள்ளது.






