திருடனுக்கு ரகசிய அலர்ட் கொடுத்த சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
காவல்துறையினர் கைது செய்ய வருகிறார்கள் என்று திருடனுக்கு தகவல் கொடுத்த காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் குருமூர்த்தி என்பவர் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.
இவர் கடந்த 2019ஆம் ஆண்டு வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் பணிபுரிந்த போது அங்கு மகேஷ் என்ற திருடனை பிடிக்க காவலர்கள் மும்முரம் காட்டினார். காவல்துறையினர் தன்னை நெருங்குவதை எப்படியோ தெரிந்து கொண்ட மகேஷ் அவர்களிடமிருந்து தொடர்ந்து தப்பி வந்துள்ளார். தீவிர முயற்சிக்கு பிறகு மகேஷை கைது செய்த காவல்துறையினர் அவரின் செல்போனை ஆய்வு செய்துள்ளனர்.
அதில் உதவி ஆய்வாளர் குருமூர்த்தி மகேஷுக்கு தகவல் கொடுத்தது தெரியவந்தது. துறைரீதியான விசாரணையில் குருமூர்த்தி மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையர் விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.






