சசிகலாவிற்கு சிறையில் ஸ்பெஷல் உணவா?
பெங்களூரு சிறையில் சசிகலாவிற்கு தனியாக சமைத்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக வெளியான தகவலை சிறைத்துறை அதிகாரிகள் மறுத்துள்ளனர். பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் கைதிகள் சிறை ஊழியர்களுக்கு 20க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சிறையில் இருக்கும் சசிகலா, இளவரசி ஆகியோரும் தனியாக சமைத்து சாப்பிடுவதாக தகவல் வெளியானது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சிறையில் சசிகலாவிற்கு சமையல் அறை உள்ளிட்ட சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க 2 கோடி ரூபாய் கை மாறியதாக அப்போது சிறைத்துறை டிஐஜி ஆக இருந்த ரூபா பரபரப்பு குற்றச்சாட்டை உயரதிகாரி மீது தெரிவித்தார்.
அது தொடர்பாகவும் சிறையில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து விசாரிக்க அப்போது உயர்மட்ட குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் தற்போது சிறையில் சசிகலா தனியாக சமைத்து சாப்பிடுவதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது .
ஆனால் இதனை சிறைத்துறை அதிகாரிகள் மறுத்துள்ளனர். சசிகலாவிற்கு சிறை உணவே வழங்கப்படுவதாகவும் தனியாக சமைத்து சாப்பிடுவதில்லை என்றும் அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.







