சாத்தான்குளம் சம்பவம் – கொலை செய்த காவலர்களுக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு..!
சாத்தான்குளம் வியாபாரிகள் கொலையான சம்பவத்தில் காவல்துறையினரை ஆதரித்தும், எதிர்த்தும் காரைக்குடியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. சாத்தான்குளம் இரட்டை கொலை சம்பந்தப்பட்ட காவலர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என தமிழகம் முழுவதும் பல எதிர்ப்புக் குரல்கள் எழுந்து வருகின்றன.
இந்த வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர் வழக்கை கையில் எடுத்து கொலை வழக்காக பதிவு செய்து கைது நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காவலர்களுக்கு ஆதரவாக பசும்பொன் சேவை சங்கம் என்ற அமைப்பினர் காவல்துறைக்கு தண்டனையா என்ற கேள்வி எழுப்பி சுவரொட்டிகள் ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேநேரம் சம்பவத்தில் ஈடுபட்ட காவலர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்கவேண்டும் என்ற வேண்டுகோளுடன் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.






