தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்..!
தமிழகத்தில் ஜூலை 3ஆம் தேதி மூன்று மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சராசரி கடல் மட்டத்தில் மகாராஷ்டிராவிலிருந்து வடக்கு கேரளா வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.
சுமார் 1.5 கிமீ உயரத்திலிருந்து 5.8 கிமீ உயரம் வரை வடக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கதேச பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி ஜூலை 03 ம் தேதி வாக்கில் உருவாகக்கூடும்.
இதன் காரணமாக, இன்று முதல் ஜூலை 2ம் தேதி வரை வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை மழை பெய்யக்கூடும். தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஜூலை 3ம் தேதி இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஜூலை 4ம் தேதி ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வடக்கு உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் ஜூலை 5ம் தேதி மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் ஜூலை 4ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு.
சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/ இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.





