மாஸ்டர் படத்திற்கு வந்த சிக்கல்! ரிலீஸ் எப்போ?
விஜய்யின் மாஸ்டர், இந்தப் படம் தயாரிப்பில் இருந்தபோதே வெளிநாட்டு வெளியீட்டு உரிமை, முழு திரையரங்க வெளியீட்டு உரிமை உள்ளிட்ட அனைத்து ஏரியாக்களும் டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் உரிமை களும் 200 கோடிக்கும் அதிகமாக விற்றுத் தீர்ந்ததாக கூறப்படுகிறது. மாஸ்டர் படம் அனைத்து பணிகளும் முடிந்து திரைக்கு வர தயாராக இருந்த நிலையில், கொரொனா பரவலைத் தடுக்க போடப்பட்ட ஊரடங்கால் திரையரங்குகள் அனைத்தும் பூட்டப் பட்டு விட்டதால் வெளியிட இயலாத நிலை ஏற்பட்டது.
வெளிநாட்டு வெளியீட்டு உரிமையை 35 கோடி ரூபாய்க்கு பெற்ற வினியோகஸ்தர் உலக நாடுகளில் ஊரடங்கு முழுமையாக தளர்வு படுத்தப்பட்ட பின்னரே மாஸ்டர் படத்தை வெளியிட வேண்டும் என்று நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த இக்கட்டான நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி மாஸ்டர் படத்தை 85 கோடி ரூபாய்க்கு விலைக்கு பெற்ற தமிழக விநியோகஸ்தர்கள் படத்தை மினிமம் கியாரண்டி அடிப்படையில் வெளியிட முடியாது என்று மொத்தமாக காலை வாரினர்.
இதை எடுத்து டிஸ்ட்ரிபியூஷன் முறையில் வெளியிட்டு கொடுங்கள் என்றும் தயாரிப்பாளருக்கு இழப்பு ஏற்பட்டால் அடுத்த படத்தில் சரி செய்வதாக கலங்காமல் முடிவெடுத்து தயாரிப்பாளருக்கு நம்பிக்கை கொடுத்துள்ளார் படத்தின் நாயகன் விஜய். பொதுவாக திரையரங்குகளில் படங்கள் 3 ஒப்பந்தம் முறைகளில் வெளியிடப்படுகிறது. ரஜினி, அஜீத், விஜய் படங்கள் மினிமம் கேரண்டி முறையிலும், பெரும்பாலான படங்கள் டிஸ்ட்ரிபியூஷன் முறையிலும், ஒரு சில படங்கள் அவுட்ரேட் முறையிலும் வெளியிடப்படுகிறது.
மினிமம் கேரண்டி என்பது விநியோகஸ்தர்கள் படத்தை பார்க்காமல் முன்கூட்டியே படத்தை தயாரிப்பாளர்களுடம் குறிப்பிட்ட விலைக்கு வாங்கி திரையரங்குகளில் வெளியிடுவார்கள். நட்டம் விநியோகஸ்தர்களை சார்ந்தது. லாபம் வந்தால் தயாரிப்பாளர்களுக்கு பங்கு கொடுக்க வேண்டும். இந்த முறையில் ரஜினி, விஜய், அஜித் போன்றவர்களின் படங்கள் மட்டுமே விற்கப்படும். டிஸ்ட்ரிபியூஷன் முறையில் நட்டம், லாபம் இரண்டுமே தயாரிப்பாளர்களை சார்ந்தது.
பணம் கொடுத்து வாங்கும் விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம் என்றால் பணத்தை தயாரிப்பாளர் திருப்பிக் கொடுக்க வேண்டும். இது பெரும்பாலும் சாதாரண நடிகர்களின் படத்திற்கு கடைபிடிக்கப்படும் வணிக முறை என்றாலும் ஸ்டார் அந்தஸ்தில் உயர்ந்த பின்னர் விஜய்யின் மாஸ்டர் படத்திற்கு இந்த வணிகமுறையை கையில் எடுத்திருப்பது இதுவே முதன்முறை.
விஜய் படத்தை காண அவரது ரசிகர்கள் எவ்வளவு விலை கொடுக்கவும் தயாராக உள்ள நிலையில், படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ஒரு புறம் எகிறியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள திரையரங்குகள் செயல்படுவதற்கான கட்டுப்பாடுகள் தளர்ந்து முழுமையாக செயல்பாட்டிற்கு வர இரண்டு மாதங்கள் ஆகும் என்ற நிலையில் கட்டுப்பாடுகள் தளர்ந்து திரையரங்குகளில் முழுமையாக பார்வையாளர்கள் அனுமதிக்கப்படும் நேரத்தில்தான் மாஸ்டர் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
அப்படியானால் குறைந்தபட்சம் மாஸ்டர் படம் வெளியாக மூன்று மாதங்கள் வரை ஆகலாம் என்று கூறப்படுகிறது. தமிழ் திரையுலகை பொறுத்தவரை மாஸ்டர், சூரரைப்போற்று படங்கள் வெளியீட்டிலும் அஜித்தின் வலிமை, ரஜினியின் அண்ணாத்த உள்ளிட்ட ஏராளமான படங்கள் தயாரிப்பிலும் அடுத்தடுத்த சவால்களை எதிர்கொண்டு வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கும் சாமானிய மக்களைப் போல காத்திருக்கின்றன.







