பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி கருப்பு பட்டியலில் சேர்ப்பு..!
அமெரிக்காவின் கருப்பு பட்டியல் நிறுவனங்களில் பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி சேர்க்கப்பட்டுள்ளது. சியோமியைப் போல மேலும் சில நிறுவனங்களையும் கருப்பு பட்டியலில் சேர்த்து அமெரிக்கா அதிரடி முடிவு எடுத்துள்ளது.
டிரம்ப் நிர்வாகம் இன்னும் சில நாட்களே ஆட்சியில் இருக்கும் நிலையில் சீன நிறுவனங்களுக்கு தொடர்ந்து அழுத்தத்தைத் தந்து வருகிறது. சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் பல ராணுவத்திற்கு சாதகமாக செயல்பட்டு உளவு பார்ப்பதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.
அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டுகளை சீன அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. இதனை தொடர்ந்து சீனாவில் ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி நிறுவனம் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது. சமீபத்தில் ஆப்பிளை பின்னுக்குத் தள்ளி உலகின் மூன்றாவது பெரிய ஸ்மார்ட்போன் நிறுவனமாக சியோமி உருவெடுத்துள்ளது என்று இன்டர்நேஷனல் டேட்டா கார்ப்பரேஷன் என்ற பிரபல சந்தை ஆய்வு நிறுவனம் கூறியிருந்தது.
இந்த நிலையில் அமெரிக்காவின் இந்த முடிவு செய்யும் நிறுவனத்திற்கு பெரிய பின்னடைவாக இருக்கும் என்று கருதப்படுகிறது. அமெரிக்காவின் இந்த அறிவிப்பிற்கு பின் சியோமி பங்கு மதிப்பு 17 சதவீதம் குறைந்துள்ளது.
இதைப்பற்றி சியோமி வெளியிட்ட அறிக்கையில் சீன ராணுவத்தின் அரசிடமும் அந்த நிறுவனத்திற்கு எந்த தொடர்பும் இல்லை என்று திட்டவட்டமாக கூறியுள்ளது. மேலும் அந்த நிறுவனத்தின் பங்குதாரர்கள் நலனை பாதுகாக்க முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.







