பொங்கல் பண்டிகை: அரசு பேருந்துகள் மூலம் வெளிமாவட்டங்களுக்கு லட்சக்கணக்கானோர் பயணம்!
பொங்கல் பண்டிகைக்காக சென்னையில் இருந்து சுமார் 4 லட்சம் பேர் அரசு பேருந்துகள் மூலம் வெளி மாவட்டங்களுக்கு சென்று வருகிறார்கள்.
பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்ல சென்னையில் கோயம்பேடு, தாம்பரம், தாம்பரம் மேக்ஸ், பூந்தமல்லி, மாதவரம், கேகே நகர் என 5 மையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று மாலை 5 மணி முதல் 7 ஆயிரத்து 191 பேருந்துகளில், 3 லட்சத்து 61 ஆயிரத்து 963 பயணிகள் புறப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
இதன் பின்னர் இரவில் புறப்பட்ட பயணிகளையும் சேர்த்தால் மொத்த பயணிகள் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்து இருக்கக் கூடும் என தெரிகிறது. இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பயணிகளின் வசதிக்காக 17 முன்பதிவு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. அரசு பேருந்துகள் தவிர ஏராளமான ஆம்னி பேருந்துகளும் வெளி மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன.
வெளியூர்களுக்கு பேருந்துகள் அதிக அளவில் சென்றதால் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது. சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களிலும் பயணிகளின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.





