--- --:--:-- --

எஸ்.ஐ.வில்சன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் : கொலையாளிகளின் கூட்டாளிகள் 2 பேர் கேரளாவில் கைது!!

IMG-20200110-WA0045

மார்த்தாண்டம் காவல் சிறப்பு உதவியாளர் வில்சனை சுட்டுக்கொன்ற கொலையாளிகளின் கூட்டாளிகள் 2 பேர் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் இந்தக் கொலையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

தமிழக – கேரள எல்லையில் உள்ள களியக்காவிளை சோதனைச் சாவடியில் பணியில் இருந்த சிறப்பு எஸ்.ஐ. வில்சன், நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். தமிழகத்தையே உலுக்கியுள்ள இந்த சம்பவத்தில் பயங்கரவாத இயக்கத்தினருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. சிசிடிவி காட்சிகள் மூலம் இந்தக் கொலையில் ஈடுபட்டது அப்தும் சமீம், தவ்பீக் என்ற இரு இளைஞர்கள் என்பதும், இவர்கள் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருப்பதும் தெரிய வந்தது.

 

இதில் அப்துல் சமீம் மீது ஏற்கனவே கொலை, கொலை முயற்சி வழக்குகள் நிலுவைகள் உள்ளது. இந்நிலையில் இந்துத்வா இயக்கங்களின் தலைவர்களை கொல்ல சதித் திட்டம் தீட்டியதாக போலீசாரால் தேடப்பட்டு வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனால் தமிழக டிஜிபி திரிபாதி நேரில் சென்று விசாரணை நடத்தினார். மேலும் கேரள போலீஸ் டிஜிபியுடனும் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து கொலையாளிகளைப் பிடிக்க இரு மாநில போலீஸ் தரப்பிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

 

மேலும் கொலையாளிகள் அப்துல் சமீம், தவ்பிக் ஆகியோரின் புகைப்படங்களை வெளியிட்டு, அவர்கள் பற்றி தகவல் தெரிவித்தால் ரூ. 2 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

 

இந்நிலையில் எஸ்.ஐ.வில்சன் கொலை தொடர்பாக, கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த சையது இப்ராஹிம், அப்பாஸ் என்ற 2 பேரை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரும் வில்சனை சுட்டுக்கொன்ற அப்துல் சமீம், தவுபிக் ஆகியோருடன் தொடர்பில் இருந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

 

பாலக்காட்டில் கைது செய்யப்பட்ட 2 பேரிடமும் தமிழக க்யூ பிரிவு போலீசாரும் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், பயங்கரவாதிகளின் சதித் திட்டம் குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் எனத் தெரிகிறது.

Leave a Reply

Right Menu Icon