தமிழகத்தில் இந்த 5 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலெர்ட்..!
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் மற்றும் தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தலைநகர் சென்னையில் எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை, கீழ்ப்பாக்கம், வில்லிவாக்கம், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், வடபழனி, நுங்கம்பாக்கம், பல்லாவரம், உள்ளிட்ட இடங்களில் விட்டுவிட்டு மழை பொழிந்தது.
மழை காரணமாக, கோயம்பேடு அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெய்து வரும் கோடை மழையால் உழவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை மற்றும் குன்னம் சுற்று வட்டாரத்தில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. மயிலாடுதுறை மாவட்டத்தில் மணல்மேடு, குத்தாலம், திருக்கடையூர், பொறையார், தரங்கம்பாடி உள்ளிட்ட இடங்களில் பெய்த மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது.
திருவள்ளூர் மாவட்டத்தில் முழுவதும் பரவலாக மழை பெய்தது. திருவாயற்பாடி ரயில்வே மேம்பாலத்தின் கீழ் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே சாலையில் தேங்கிய மழை நீரை அகற்றகோரி வியாபாரிகள் மறியலில் ஈடுபட்டனர். கனமழையால், கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் சாலையோர மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது.
அப்போது அவ்வழியாக ஆட்டோவில் பயணித்தவர்கள் நூலிலையில் தப்பினர். குன்னூரில் இருந்து கோத்தகிரி செல்லும் சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.இந்நிலையில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, தேனி ஆகிய மாவட்டங்களில் இன்று 20 சென்டி மீட்டர் வரை, மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதே போன்று, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களிலும் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.





