ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக காவல் ஆய்வாளர் ஸ்ரீதருக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு..!
சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக காவல் ஆய்வாளர் ஸ்ரீதருக்கு ஜாமீன் வழங்க சிபிஐ எதிர்ப்பு தெரிவித்துள்ளது. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு நீதிபதி பாரதிதாசன் முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் சம்பவம் நிகழ்ந்த அன்று ஸ்ரீதர் வெளியூர் சென்றிருந்ததால் காவல் நிலையத்தில் இல்லை என்றும் ஜெயராஜ், பென்னிக்ஸ் தாக்கப்பட்டதற்கு ஸ்ரீதருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
விசாரணையை மேற்கொள்வதற்கு முன்பாகவே ஸ்ரீதர் மீது சிபிஐ முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்திருப்பதாகவும் அவருக்கு முதுகெலும்பு பிரச்சினை இருப்பதால் உடல் நலத்தைக் கருத்தில் கொண்டு ஜாமின் வழங்க வேண்டும் எனவும் வாதிடப்பட்டது.
ஆனால் காவல் நிலையத்தின் பொறுப்பாளராக இருந்த ஸ்ரீதரின் கவனத்திற்கு வராமல் தாக்குதல் நடக்க வாய்ப்பில்லை என்றும் ஜெயராஜ் பென்னிக்ஸ் மீது பொய்யான வழக்குகள் பதியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
விசாரணை முடியாத நிலையில் ஸ்ரீதருக்கு ஜாமீன் வழங்கினால் அவர் சாட்சிகளை கலைக்க வாய்ப்பிருப்பதாகவும் சிபிஐ தரப்பில் வாதிடப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி வழக்கு தொடர்பான விசாரணை குறிப்பை விசாரணை அதிகாரி தாக்கல் செய்ய உத்தரவிட்டு தீர்ப்பை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.







