கொரோனா இல்லாத நாடாக மாறியது நியூசிலாந்து! கொரொனாவை வீழ்த்தி வெற்றியை சந்தித்த அதிபர் ஜெசிந்தா!
????????????????????????????????????
உலகின் பெரும்பாலான நாடுகளில் கொரோனா வைரசை கையாள முடியாமல் திணறி வரும் நிலையில் நாட்டை விட்டே கொரொனாவை விரட்டி சாதித்திருக்கிறது நியூசிலாந்து. சமகால அரசியல் தலைவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக போராடுவார்கள். பிறகு அதை தக்க வைத்துக் கொள்வதற்காக திட்டமிடுவார்கள்.
ஆனால் அதிகாரத்தை குறிவைத்தே செயல்கள் இருந்தால் மக்கள் மீதான கரிசனம் குறைந்துவிடும் என்கிறார் நியூசிலாந்து நாட்டின் பிரதமர் ஜெசிந்தா. உலகம் இவரை கனிவான பிரதமர் என்று கொண்டாடுகிறது. மிகக் கொடூரமான பயங்கரவாத தாக்குதல், கொரொனா வைரஸ் பாதிப்பு என மிகக் கடினமான தருணங்களில் நியூசிலாந்து நாட்டை வழிநடத்துகிறார் ஜெசிந்தா.
39 வயதான ஜெசிந்தா லேபர் கட்சியை சேர்ந்தவர். 37 வயதில் பிரதமரானார். அதன் பிறகு குழந்தை பெற்றுக் கொண்டார். நாடாளுமன்றத்திலும் தாயாகவே நடந்துகொண்டார். எளியவர்கள் துயரத்தில் துடிக்கும் போது அவர்களுக்காக இறங்குகிறார். மகிழ்ச்சியை பொதுவெளியில் பகிர்ந்து கொள்கிறார். இவற்றால் மட்டுமே அவர் மாறுபட்டவராக அறியப்படவில்லை.
அவரது நிர்வாகத்திறன் நாட்டை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. நியூசிலாந்தில் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு பிப்ரவரி எட்டாம் தேதி கண்டறியப்பட்டது. ஆனால் அதற்கு நான்கு வாரங்களுக்கு முன்பே வெளிநாட்டு விமானங்களுக்கு கட்டுப்பாட்டை அறிவித்தார் ஜெசிந்தா. மார்ச் மாதத்தில் பொது முடக்கத்தை அமல்படுத்தினார் ஜெசிந்தா. நான்கு நிலை எச்சரிக்கைகள் வரையறுக்கப்பட்டன.

இந்த காலகட்டத்தில் மொத்தம் ஆயிரத்து 154 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள். உயிரிழப்பு 22 க்குள் கட்டுப்படுத்தப்பட்டது. கடந்த 17 நாட்களாக புதிதாக தொற்று எதுவும் கண்டறியப்படவில்லை. நியூசிலாந்து சுற்றுலாவை நம்பி இருக்கும் நாடு என்பதால் பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே லட்சக்கணக்கானோர் வேலை இழந்தார்கள்.
பொருளாதார நெருக்கடி, கொரோனா பாதிப்பு என இரண்டுக்கும் இடையே சமநிலையைப் பேணி இப்பொழுது கொரொனாவை முற்றிலுமாக வென்று சாதித்து இருக்கிறார் ஜெசிந்தா. ஜெசிந்தாவின் நடவடிக்கைகளுக்கு உள்நாட்டில் 87 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள் .
அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் புதின் ,சீன அதிபர் ஜின்பிங் மிகப் பிரபலமான தலைவர்கள் ஆட்சி செய்து கொண்டிருக்கும் நிலையில் பூமியின் ஆளுமை மிக்க தலைவர் என்று ஜெசிந்தாவை முன்னணி ஊடகங்கள் புகழ்கின்றன. அதே நேரத்தில் நியூசிலாந்தின் புவியியல் அமைப்பு அரசியல் முறையை மக்கள் தொகை போன்றவற்றை விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.







