தேர்தலை சீர்குலைக்க சதி? அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பகீர் தகவல்
தாம் போட்டியிடும் திருமங்கலம் தொகுதியில் தேர்தலை சீர்குலைக்க எதிர்க்கட்சி வேட்பாளர்கள் சதி செய்வதாக, அதிமுக வேட்பாளரான அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.
மதுர மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் போட்டியிடுகிறார். இந்த நிலையில் தனது ஆதரவாளர்களுடன் சுமார் 30 கிலோமீட்டர் நடைபயணம் சென்று அவர் வாக்கு சேகரித்தார். டி. கல்லுப்பட்டியில் தொடங்கிய இந்தப் பிரச்சார நடைபயணம் டி. குன்னத்தூர் அம்மா கோயில், கள்ளிக்குடி, திருமங்கலம் வழியாக சென்று கப்பலூரை அடைந்து நிறைவுபெற்றது.
நடைபயணத்தின்போது, அதிமுக அரசின் 10 ஆண்டு கால சாதனையை விளக்கி வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்தார். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தனது தொகுதியில் எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணைய விதிகளை மீறி பல்வேறு சதி செயல்களை செய்து, அதன் மூலம் அமைதியான முறையில் நடைபெறும் தேர்தலை சீர்குலைக்க சதி செய்வதாகக் கூறினார். இது தொடர்பாக, எதிர்க்கட்சிகள் மீதான புகார் மனுவினை தேர்தல் அதிகாரியிடம் அமைச்சர் தரப்பினர்.
பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறுகையில், சட்டசபைத்தேர்தலில் திருமங்கலம் தொகுதியில் எதிர்க்கட்சி வேட்பாளர்கள் தேர்தலில் அமைதியை சீர்குலைத்து வன்முறையை கட்டவிழ்த்து விட சதி திட்டம் தீட்டி உள்ளனர். தேர்தலை அமைதியான முறையில் நடத்தக்கோரி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் திருமங்கலம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம்.
அதிமுக அரசின் சாதனையை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல திமுக மிகப்பெரிய தடையாகவும் தடுப்பு வேலியாகவும் உள்ளது. அதிமுக அரசின் சாதனையை திமுக மறைக்க நினைப்பது வானத்தை போர்வையைக் கொண்டு மூடுவதை போல் முட்டாள்தனமானது என்றார்.





