--- --:--:-- --

வாசகர்களின் ஏகோபித்த ஆதரவுடன், குற்றம் குற்றமே இதழ், இன்று தனது 11ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறது. மக்களின் நலனே பிரதானம் என்ற அடிப்படையில் ஆட்சியாளர்களின் தவறுகளை தட்டிக் கேட்டு, எங்கு தவறு நேர்ந்தாலும் “குற்றம் குற்றமே” என்று சமரசமின்றி, நடுநிலையோடு செல்லும் எங்களின் பயணும் உங்கள் ஆதரவோடு என்றும் தொடரும்.

 

‘குற்றம் குற்றமே’ என்ற அரசியல் மற்றும் புலனாய்வு வார இதழ், தனது 10-வது ஆண்டை நிறைவு செய்து, இன்று 11ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. மக்கள் நலன் மட்டுமே பிரதானம் எனும் பயணத்தை குற்றம் குற்றமே தொடர்கிறது. வெறும் செய்திகளை மட்டும் அளிப்பதோடு நின்றுவிடாமல், சமூகத்தில் நடக்கும் அநீதிகளையும், அதிகார துஷ்பிரயோகங்களையும் துணிச்சலுடன் வெளிச்சத்திற்கு கொண்டுவரும் பணியை குற்றம் குற்றமே செய்து வருகிறது.

சமூகம் மற்றும் அரசியல் குறித்த ஆழமான பார்வைகளை, எளிய நடையில் வழங்குவதன் மூலம், ஒவ்வொரு வாசகரையும் சிந்திக்கத் தூண்டுகிறது. “குற்றம் குற்றமே” எனத் துணிச்சலாக வெளிப்படுத்தும் அதன் ஒவ்வொரு சொல்லும், ஜனநாயகத்தின் நான்காவது தூணாக பத்திரிக்கைத்துறைக்கு உள்ள பொறுப்பை உணர்த்துகிறது.

 

குற்றம் குற்றமே 11ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், அதன் ஆசிரியர் ஷஷ்டி கண்ணதாசன் கூறியதாவது: திருப்பூர் மக்களின் குரலாக ஒலித்துவரும் குற்றம் குற்றமே இதழ், எந்த ஒரு சார்புமின்றி, நேர்மையுடன் தொடர்ந்து செயல்படும். தவறு புரியும் அதிகாரிகள், ஆட்சியாளர்கள் என யாராக இருந்தாலும், தயக்கமின்றி விமர்சனம் செய்து, அதன் மூலம் மக்களுக்கான நீதியை நிலைநாட்ட முயற்சிப்போம் என்று உறுதி அளிக்கிறோம்.

இந்த இதழ், வரும் காலங்களிலும் இதே துணிச்சலுடனும் நேர்மையுடனும் செயல்பட்டு, சமூக மாற்றத்திற்கான பயணத்தில் தொடர்ந்து ஒளிரும். நாங்கள் செய்திகளை வெளியிடுவதோடு மட்டுமல்லாமல், சமூகப் பொறுப்புணர்வுடனும் செயல்படுகிறோம்.

 

மக்களுக்காக இலவச மருத்துவ முகாம்கள், ரத்த தான முகாம்கள் போன்றவற்றை நடத்தி, சமூகசேவைக்கு பங்களிப்பு செய்கிறோம். இந்த சேவைகள், இந்த இதழ் ஒரு பத்திரிகையாக மட்டும் இல்லாமல், சமூக நலனில் அக்கறை கொண்ட ஒரு அமைப்பாகவும் திகழ்கிறது என்பதை நிரூபிக்கின்றன. செய்திகளைச் சேகரிப்பதில் காட்டும் அதே துணிச்சலையும் நேர்மையையும், மக்கள் நலத் திட்டங்களிலும் செய்கிறோம்.

 

குற்றம் குற்றமே இதழின் வளர்ச்சிக்கு துணை நிற்கும் வாசகர்கள், விளம்பரதாரர்கள், ஏஜெண்டுகள் மற்றும் பக்க துணையாக இருக்கும் தொழில் அமைப்புகள், வர்த்தக நிறுவனங்கள், பின்னலாடை தொழில் துறையினர், அரசியல் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு, குற்றம் குற்றமே நிறுவன ஆசிரியர் சஷ்டி கண்ணதாசன் தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon