பாஜக தலைவராக ஜே.பி.நட்டா போட்டியின்றி தேர்வு..! பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்து!!
பாஜக தேசிய தலைவராக ஜே.பி. நட்டா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். தலைவர் பொறுப்பேற்ற அவருக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்பட பாஜக தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
பாஜக தேசியத் தலைவராக இருந்த அமித்ஷா, மோடி தலைமையிலான மத்திய மத்திய அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக பதவியேற்றார். இதனால் கட்சி விதிகளின்படி பாஜக தலைவர் பதவியை அவர் துறக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே புதிய தலைவருக்கான தேர்தல் டெல்லியில் இன்று நடைபெற்றது.
கட்சியின் செயல் தலைவராக உள்ள ஜே.பி.நட்டா மட்டுமே தலைவர் பதவிக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்தார். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் ஜே.பி. நட்டா பெயரை முன்மொழிந்தனர். வேறு யாரும் தலைவர் பதவிக்கு போட்டியிடாததால், ஜே.பி. நட்டா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து பாஜக தலைமை அலுவலகத்தில், கட்சியின் புதிய தேசியத் தலைவர் பொறுப்பை ஜே.பி. நட்டா ஏற்றார். அவருக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பாஜக முக்கிய தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். 56 வயதான ஜே.பி.நட்டா, இமாச்சல பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். அம்மாநில அமைச்சரவையில் அமைச்சராக பதவி வகித்த நிலையில், தேசிய அரசியலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளார். அமைதியான சுபாவம் கொண்ட ஜே.பி.நட்டா, இதுவரை எந்தவித சச்சரவுகளிலும் சிக்காதவர் என்பது குறிப்பிடத்தக்கது.





