மகளை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தந்தை மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது!
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் சென்னம்பட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி (45). இவருக்கு 2 மனைவிகள், இருவரும் சகோதரிகள். இவர்கள் இருவருக்கும் ஆளுக்கொரு மகள் உள்ளனர். கருப்பசாமி தற்போது புதூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், 2வது மனைவியின் 14 வயது மகளுக்கு சில தினங்களுக்கு முன் திடீரென வயிற்று வலி ஏற்பட்டதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து புதூர் அரசு மருத்துமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது சிறுமி ஆறு மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து சிறுமியின் தாய் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் சிறுமியிடம் நடத்திய விசாரணையில், கடந்த ஆண்டு அரையாண்டு விடுமுறையில் இருந்த போது, அவரது தந்தை கருப்பசாமி குடிபோதையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
மேலும் வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக கூறி தொடர்ந்து மிரட்டி பாலியல் தொந்தரவு செய்துள்ளார் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கருப்பசாமியை போலீசார் தேடி வந்தனர்.






