உள்ளாட்சித் தேர்தலுக்காக சொத்து வரி குறைப்பு; மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
உள்ளாட்சித் தேர்தலுக்காகவே உயர்த்தப்பட்ட சொத்து விரியை தமிழக அரசு குறைத்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் உள்ள 15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள், 528 பேரூராட்சிகளில், கடந்த ஏப்ரல் முதல் சொத்து வரிக் கட்டணம் உயர்த்தப்பட்டது. சொந்த வீடு வைத்திருப்பவர்களுக்கு 50 சதவீதமும், வாடகைக்கு விட்டிருந்தால் 100 சதவீதமும் வரியை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
இதற்கிடையே, நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, இந்த சொத்து வரி உயர்வு நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவித்தார். 2019 ஏப்ரல் மாதத்துக்கு முன்பு செலுத்தி வந்த தொகையையே இப்போதும் செலுத்தலாம் எனவும், கூடுதல் கட்டணம் செலுத்தியிருந்தால், அந்தத் தொகை அடுத்து கட்ட வேண்டிய வரியின் போது சரி செய்யப்படும் என்றும் அமைச்சர் வேலுமணி தெரிவித்திருந்தார்.
சொத்து வரி தொடர்பாக தமிழக அரசின் இந்த திடீர் நடவடிக்கையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உள்ளாட்சித் தேர்தலை கருத்தில் கொண்டே சொத்து வரியை தமிழக அரசு குறைத்துள்ளது. இதுவரை பொது மக்கள் கூடுதலாக செலுத்திய வரியை பணமாகவோ, காசோலையாகவோ சம்பந்தப்பட்டவர்களுக்கு திருப்பித் தர வேண்டும் எனவும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.





