விபத்தில் திமுக பிரமுகர் பலி… திருப்பூரில் சோகம்!
திருப்பூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில், திமுக தலைமை செயற்குழு உறுப்பினரான வீர சுந்தரி என்கிற பழனிச்சாமி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது திமுகவினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
திருப்பூர் மாவட்டம் மணக்கடவை பகுதியை சேர்ந்தவர், வீரசுந்தரி (எ) பழனிச்சாமி. திமுக தலைமை செயற்குழு உறுப்பினராகவும், 12வது வார்டு கவுன்சிலருமாக இருக்கிறார். இவர் இன்று பகலில், தனது கிராமத்தில் இருந்து தாராபுரம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த அவரது கார், சாலையோரம் இருந்த மரத்தில், அதிவேகமாக மோதி நின்றது.
இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே, பழனிசாமி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், பழனிச்சாமியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .
தேர்தல் வாக்குப்பதிவு நாளில் திமுக பிரமுகர் விபத்தில் பலியான சம்பவம், தாராபுரம் பகுதி திமுகவினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






