திமுக ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி ஊழல்..!
திமுக ஆட்சியில் நான்கு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடைபெற்றதாக கூறியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதனை விசாரிக்கும்படி ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் மனு அளித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னை கிண்டியில் உள்ள மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்துப் பேசினார்.
அப்போது, 2021 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை திமுக ஆட்சியில் ஊழல் நடைபெற்றதாக கூறி பட்டியல் ஒன்றை ஆளுநரிடம் வழங்கினார். இந்த சந்திப்பின்போது முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, நான்கு ஆண்டுகால ஆட்சியில், திமுக ஊழலை தவிர மக்களுக்கு எந்தவித நன்மையும் செய்யவில்லை என்று விமர்சித்தார்.அரசின் பல்வேறு துறைகளில் அதிகளவு ஊழல் நடைபெற்றுள்ளதாகவும், இதற்கு போதிய ஆதாரம் உள்ளதால் விரிவான விசாரணை நடத்தும்படி ஆளுநரிடம் வலியுறுத்தியிருப்பதாகவும் தெரிவித்தார்.
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் 5 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தொகை வழங்காதது ஏன் என்றும் எடப்பாடி பழனிசாமி கேள்வியெழுப்பினார்.





