டெல்லியில் அதிகரிக்கும் கொரொனா தொற்று! மாநில அரசு எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன?
டெல்லியில் கொரொனா தொற்று பெருகிவரும் நிலையில் இதுதொடர்பாக அம்மாநில துணைநிலை ஆளுநரும், முதலமைச்சரும் எடுத்துவரும் முரண்பட்ட நடவடிக்கைகள் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளன.
டெல்லியில் உள்ள மாநில அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரொனா சிகிச்சையை வெளிமாநிலத்தவருக்கு வழங்கக்கூடாது என்றும் டெல்லியை சேர்ந்தவருக்கு மட்டுமே தரப்பட வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்த நிலையில் இந்த முடிவை நிராகரித்த துணைநிலை ஆளுநர் அணில் பைஜால் டெல்லியில் எவ்வித பாகுபாடுமின்றி சிகிச்சை வழங்க வேண்டும் என மருத்துவமனைகளுக்கு உத்தரவிட்டார். இதை தொடர்ந்து கருத்து தெரிவித்துள்ள முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே மாநில அரசு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை என்ற தங்கள் உத்தரவு மீறப்பட்டால் அது பெரும் சிக்கல்களை ஏற்படுத்துமென கூறியுள்ளார்.

எல்லா மாநிலங்களிலிருந்தும் டெல்லி வருபவர்களுக்கு சிகிச்சையை தருவது சவாலான பணியாக இருப்பதாக தெரிவித்த கேஜ்ரிவால் அவர்களுக்கு தலைநகரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய முயற்சித்து வருவதாக கூறியுள்ளார்.
இதற்கிடையில் மத்திய அரசின் நிர்ப்பந்தத்தின் பேரிலேயே தங்கள் முடிவை துணைநிலை ஆளுநர் நிராகரித்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. டெல்லியில் கொரோனாவால் 29 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 874 பேர் இறந்துள்ளனர்.







