சாத்தான்குளம் வழக்கில் கைது செய்யப்பட்ட 2 காவலர்களுக்கு கொரொனா தொற்று உறுதி.!
சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் 10 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சிபிஐ விசாரணை நடந்து வரும் நிலையில் சிறையில் உள்ள காவலர்கள் முத்துராஜ் மற்றும் முருகனுக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது.
இவர்களிடம் விசாரணை நடத்தி வந்த சிபிஐ அதிகாரிகள் 6 பேருக்கு ஏற்கனவே கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டிருக்கும் இரண்டு காவலர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 10ஆம் தேதி முதல் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக ஐந்து சிபிஐ அதிகாரிகளுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று மதுரையில் விசாரணை செய்து வரக்கூடிய அதிகாரிகளுக்கு உதவியாக இருந்த மேலும் ஒரு சிபிஐ அதிகாரிக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த 24 ஆம் தேதி இதே கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சார்பு ஆய்வாளர் பால் துறைக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இன்று தலைமை காவலர் முருகன் மற்றும் காவலர் முத்துராஜ் ஆகிய இருவருக்கும் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.







