சென்னையில் குடியரசு தின விழா : கோவை மாநகர காவல் நிலையத்திற்கு முதல் பரிசு!!
சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், தமிழகத்தில் சிறந்த காவல் நிலையத்திற்கான முதலமைச்சர் விருது, கோவை மாநகர காவல் நிலையத்திற்கு வழங்கப்பட்டது.
நாட்டின் 69-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் இந்த விழாவில் பங்கேற்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருது மற்றும் பதக்கங்களையும் பரிசுகளையும் வழங்கி கௌரவித்தார்.
கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த மெச்சத்தக்க வகையில் பணிபுரிந்த காவலர்களுக்கு காந்தியடிகள் காவலர் பதக்கங்கள் வழங்கப்பட்டது. திருப்பூர் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் சந்திரமோகன், திருச்சி ஆய்வாளர் ராஜசேகரன் , பண்ருட்டி காவல் ஆய்வாளர் பூங்கோதை, விழுப்புரம் காவல் உதவி ஆய்வாளர் அழகிரிகும்பகோணம் மேற்கு காவல் நிலைய தலைமைக் காவலர் பார்த்திபன் ஆகியோர் இந்த விருதை பெற்றுக் கொண்டனர்.

இதே போல் சிறந்த காவல் நிலையத்துக்கான முதலமைச்சரின் விருது, கோவை நகர காவல் நிலையத்திற்கு வழங்கப்பட்டது. திண்டுக்கல் காவல் நிலையத்திற்கு 2-வது பரிசும், தர்மபுரி காவல் நிலையத்திற்கு 3-வது பரிசும் வழங்கப்பட்டது.
விவசாயத்துறையில் அதிக உற்பத்தி செய்து சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்படும் வேளாண் துறை சிறப்பு விருது ஈரோடு மாவட்டம் சென்னிமலை குன்னாங் காட்டுவலசைச் சேர்ந்த யுவக்குமாருக்கு வழங்கப்பட்டது. இதே போன்று பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய பலருக்கும் முதலமைச்சர் பழனிச்சாமி பதக்கங்களையும், விருதுகளையும் வழங்கி கவுரவித்தார்.





