--- --:--:-- --
1

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான மூவருக்குமான தண்டனை விவரம் குறித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. கோவை பீளமேடு விமான நிலையம் பின்புறம், பிருந்தாவன் நகரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 2ம் தேதி இரவு ஆண் நண்பருடன் 21 வயதான கல்லூரி மாணவி பேசிக் கொண்டிருந்தார்.

 

அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல் ஆண் நண்பரை தாக்கிவிட்டு, மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். இந்த வழக்கில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரர்களான சதீஷ் என்ற கருப்பசாமி (30), கார்த்திக் என்ற காளீஸ்வரன் (21), மதுரை கருப்பாயூரணியைச் சேர்ந்த குணா என்ற தவசி (20) ஆகியோரை துடியலூர் அருகே போலீசார் துப்பாக்கியல் சுட்டுப்பிடித்தனர்.

இதனைத்தொடர்ந்து கோவை மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி சுந்தரராஜன் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. அதன்படி 270 பக்கங்களில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன. சாட்சிகள் விசாரணை கடந்த மாதம் 2ம் தேதி தொடங்கியது. கல்லூரி மாணவி, மாணவியின் ஆண் நண்பர், மாணவியின் தாய், காவல்துறை அதிகாரிகள் உள்பட பலரும் சாட்சியம் அளித்தனர்.

அதன்பேரில் 21 நாட்களில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்தது. இந்த வழக்கு இன்று கோவை மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில் கைது செய்யப்பட்ட 3 பேருமே குற்றாவாளிகள் என தீர்ப்பு வழங்கியுள்ளது.

 

மேலும் 3 பேருக்கான தண்டனை விவரம் 3 மணிக்கு அறிவிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், கூட்டு பாலியல் என்ற பிரிவில் மூன்று பேருக்கும் வாழ்நாள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Right Menu Icon