தமிழ்நாட்டில் வரும் 19-ஆம் தேதிவரை கனமழைக்கு வாய்ப்பு..!
சென்னையில் அதிகாலையில் மழை பெய்த நிலையில், தொடர்ந்து வெயிலின்றி இதமான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். சென்னையில் நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வடபழனி, ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, அண்ணா நகர், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட மாநகரின் பெரும்பாலான இடங்களில் அதிகாலையில் மழை பெய்தது. இதேபோல, சென்னை புறநகர் பகுதிகளான குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் அதிகாலையில் மிதமான மழை பெய்தது.
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக, வில்லிவாக்கத்தில் 6 சென்டிமீட்டர், பல்லாவரத்தில் 4 சென்டிமீட்டர், செம்மஞ்சேரி மற்றும் தாம்பரத்தில் தலா 3 சென்டிமீட்டர் மழை பெய்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, சென்னை மாநகர் முழுவதும் முற்பகலில் மேகமூட்டமாக காட்சி அளித்த நிலையில், 30 டிகிரி செல்சியஸுக்கு குறைவாகவே வெப்பநிலை இருப்பதால் குளு குளு சூழல் நிலவுகிறது.





