சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பான வழக்கை விசாரிக்க தூத்துக்குடி சென்ற சிபிஐ அதிகாரிகள்!
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் போலீசார் நடத்திய தாக்குதலில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. பின்னர் சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில் 10 காவலர்களை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 10 பேர் மீதும் கொலை உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. வழக்குப் பதிந்து விசாரணை நடத்துகிறது. இதற்காக சிபிஐ ஏடிஎஸ்பி விஜயகுமார் சுக்லா தலைமையில் அனுராக் சிங், பவன்குமார் திவேதி, சைலேஷ்குமார், சுஷில் குமார் வர்மா, அஜய்குமார், சச்சின், பூனம் குமார் ஆகிய 8 பேர் கொண்ட குழுவினர் டெல்லியிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தனர்.
பின்னர் காரில் அவர்கள் துத்துக்குடி சிபிசிஐடி அலுவலகம் வந்தடைந்தனர். அங்கு இதுவரை இந்த வழக்கு தொடர்பாக கைப்பற்றப்பட்டுள்ள ஆதாரங்கள் குறித்து ஆய்வு செய்தனர். பின்னர் சிபிசிஐடியிடம் இருந்து ஆவணங்களை பெற்றுக் கொணடு விசாரணையை துவங்க உள்ளனர்.






