திருச்சி தவெக தலைவர் விஜய் பரப்புரையில் ஆடியோ பிரச்சனை..!
திருச்சி பரப்புரையில் ஆடியோ பிரச்சனையால் தவெக தலைவர் விஜய் பேசியது சரியாக கேட்கவில்லை என தொண்டர்கள் முழக்கமிட்டனர். தமிழ் திரைத்துறையில் உச்ச நடிகராக திகழும் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சித் தொடங்கியுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, ஆட்சி அரியணை ஏறும் இலக்குடன் விஜய் தீவிரமாக பணியாற்றி வருகிறார்.
இதுவரை மாநாடுகள் மூலம் மட்டுமே தொண்டர்களை சந்தித்த அவர் திருச்சியில் இருந்து தனது அரசியல் பரப்புரை பயணத்தை இன்று தொடங்குகினார். அதன்படி திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் சனிக்கிழமை பரப்புரை செய்கிறார். மக்களை சந்திக்கவில்லை என்ற விமர்சனங்களுக்கு மத்தியில், விஜயின் மக்கள் பயணம் அரசியல் களத்தில் கவனம் பெற்றுள்ளது.
இதனைத்தொடர்ந்து, தவெக தலைவர் விஜய் இன்று ஒரே நாளில் 3 மாவட்டங்களில் பரப்புரை மேற்கொள்கிறார். அதன்படி முதற்கட்டமாக, திருச்சி மரக்கடை எம்.ஜி.ஆர்.சிலை அருகே காலை 10.35 மணிக்கு பரப்புரை தொடங்குவதாகவும், அதனை தொடர்ந்து, பிற்பகல் ஒரு மணிக்கு அரியலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் பரப்புரை மேற்கொள்வதாகவும், மாலை 4 மணிக்கு பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பேருந்து நிலையம் அருகே பரப்புரை செய்யவும், மாலை 5 மணியளவில் வானொலி திடலில் தனது பயணத்தை நிறைவு செய்வதாகவும் தவெக தரப்பில் திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், கட்டுக்கடங்காத கூட்டத்தால் திருச்சி விமான நிலையத்தில் இருந்து மரக்கடை எம்.ஜி.ஆர் சிலைக்கு வருவதற்கு 5 மணி நேரம் ஆனது. இதையடுத்து தனது முதல் பரப்புரையை விஜய் தொடங்கியபோது மைக்கில் ஏற்பட்ட ஆடியோ பிரச்சனையால் தவெக தலைவர் விஜய் பேசியது சரியாக கேட்கவில்லை என தொண்டர்கள் முழக்கமிட்டனர்.
இதனைத்தொடர்ந்து திருச்சியில் மேற்கொண்ட தேர்தல் பரப்புரையின்போது தவெக தலைவர் விஜய் பேசுகையில், “எல்லாருக்கும் வணக்கம். ஜனநாயக போருக்கு செல்வதற்கு முன்பு உங்களை பார்க்க வந்துள்ளேன். அரசியலில் களம் இறங்க அண்ணா முடிவெடுத்த இடம் திருச்சி. பெரியார் வாழ்ந்த மண் திருச்சி. கல்வி மதச்சார்பின்மைக்கு பெயர் பெற்ற இடம் திருச்சி. திருச்சியில் தொடங்கிய அனைத்துமே திருப்பு முனையாக அமையும் என சொல்லுவார்கள்.
மக்கள் கூட்டத்தை பார்க்கும்போது பரவசமாகிறது. தவெக தொண்டர்களை பார்க்கும்போது பரவசமாகவும், உணர்ச்சிப்பூர்வமாகவும் உள்ளது. திமுக அரசு எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. சொன்னீர்களே.. செய்தீர்களா?. பெண்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு பாதுகாப்பில் நோ காம்பரமைஸ். தவெக ஆட்சி அமைந்தால் நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே நாங்கள் செயல்படுத்துவோம்.” என்று பேசினார். இதனைத்தொடர்ந்து திருச்சி மரக்கடை பகுதியில் பரப்புரை நிறைவு பெற்றதையடுத்து அரியலூரில் பரப்புரை மேற்கொள்ள தவெக தலைவர் விஜய் புறப்பட்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




