நடிகர் முத்துக்காளையின் மனைவி உயிரிழப்பு..!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்தவர் நடிகர் முத்துக்காளை. இவர், சினிமா மோகத்தால் இளம் வயதிலேயே சென்னைக்கு வந்தார். 18 வயதில் கராத்தே-வில் பிளாக்-பெல்ட் வாங்கிய இவர், சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றத் தொடங்கினார். இதனால், கல்வியைத் தொடர முடியாமல் போனது. பின்னர், நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
இருந்த போதும் மதுப் பழக்கத்திற்கு அடிமையாகி திக்கெட்டு நின்றார். இதையடுத்து, குடிப்பழக்கத்தில் இருந்து மீண்டு வந்த முத்துக்காளை, கல்வியில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பு படிக்க ஆரம்பித்தார். தனது விடா முயற்சியால், அண்மையில் தான் இளங்கலை தமிழ் இலக்கியத்தில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று சாதித்தார்.
ஏற்கனவே, முத்துக்காளை தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் 2017 ஆம் ஆண்டு இளங்கலை வரலாறும், 2019 ஆம் ஆண்டு தமிழில் முதுகலை பட்டமும் பெற்றார். மதுப் பழக்கத்திற்கு அடிமையானாலும் அதில் இருந்து மீண்டு வந்து சாதிக்க வேண்டும் என்ற தனது எண்ணத்திற்கு கல்வியே அடித்தளமாக மாற்றிய முத்துக்காளைக்கு அண்மைகாலமாக சினிமாவில் பெரிய வாய்ப்புகள் வரவில்லை.
இந்த நிலையில் தான், சில தினங்கள் முன் தனது மனைவியைக் காப்பாற்ற வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை உருக்கமான வேண்டுகோளை முன்வைத்தார். அதில், தனது மனைவி மாலதியை தலையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக ஒரு ஆபரேஷனுக்காக சென்னை கீழ்ப்பாக்கம் கேஎம்சி மருத்துவமனையில் சேர்த்ததாகவும், ஆபரேஷன் முடிந்து 17 நாள் ஆன நிலையில் நுரையீரல் தொற்று உட்பட சிறிய சிறிய தொற்றுகள் காரணமாக என் மனைவி மூச்சுவிடுவதில் சிரமப்படுகிறார் என்றும் கூறி முதல்வர் விஜய்யிடம் உதவி கேட்டிருந்தார்.
அதன்படி, முதல்வர் விஜய்யின் உத்தரவின் பெயரில் அமைச்சர் ராஜ்மோகன் நேரில் சென்று முத்துக்காளையை சந்தித்து தேவையான உதவிகளை செய்ய மருத்துவர்களுக்கு உத்தரவிட்டிருந்தார். இதற்கிடையே, நடிகர் முத்துக்காளை மனைவி கடந்த 19 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை 9 மணிக்கு காலமானார்.
அவரது உடல் இறுதி சடங்கிற்காக விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் தாலுகா, சங்கம்பட்டி என்ற திருக்கோதையாபுரம் எடுத்துச் செல்லப்படுகிறது. நடிகர் முத்துக்காளை அவரது மனைவியின் உடலை ஆம்புலன்ஸில் எடுத்துச் சென்றுக் கொண்டுள்ளார். இறுதிச்சடங்கு இன்று இரவு அவரின் சொந்த ஊரில் நடைபெறுகிறது.





