பேஸ்புக் மூலம் பெண்களை ஏமாற்றிய இருவர் கைது..!
தமிழகம் முழுவதும் பேஸ்புக் மூலம் பெண்களை ஏமாற்றிய பழனியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே பேஸ்புக் வாயிலாக பழகியவர் தன்னை சந்தித்து நகைகளை பறித்துச் சென்றதாக பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அதன்பேரில் விசாரிக்க அமைக்கப்பட்ட சங்கராபுரம் தனிப்படை காவல்துறையினர் திருவண்ணாமலை திருக்கோவிலூர் பிரிவு சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு சொகுசு காரில் வந்த இளைஞர்களை நிறுத்தி விசாரணை செய்ததில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பேஸ்புக் மூலம் கள்ளக்குறிச்சி மற்றும் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பெண்களிடம் ஆபாச வார்த்தைகளைக் கூறி பாலியல் தவறுகளை செய்து நகைகளை கொள்ளை அடிக்கும் கும்பலை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.
அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் பழனி பகுதியை சேர்ந்த மனோஜ் குமார் கௌதம் என்பது தெரியவந்தது. பின்னர் இருவரையும் கைது செய்த காவல்துறையினர் சொகுசு கார், 6 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் விலை உயர்ந்த பல லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.






