ராசியானவர் எடப்பாடி! மீண்டும் முதல்வராவார்… பாஜக தலைவர் ‘ஐஸ்’!!
எடப்பாடி பழனிச்சாமி மிகவும் ராசியானவர்; அவர், மீண்டும் தமிழக முதல்வராவார் என்று, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி புகழ்ந்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் பாஜக – அதிமுக இடையே திடுதிடுப்பென நேற்று நள்ளிரவு திடீரென தொகுதி உடன்படிக்கையில் கையெழுத்தானது. இதில் பாஜக தரப்பில் மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி, தமிழக பாஜக தலைவர் எல். முருகன் கையெழுத்திட்டனர்.
இந்த சூழலில், பாஜக சார்பில் மதுரை வடக்கு சட்டப்பேரவைத் தொகுதி அலுவலகத்தை, மதுரை புதூர் பகுதியில், தமிழக பாஜகவின் மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி இன்று திறந்து வைத்தார். அதன் பின்னர் நிருபர்களுக்கு சி.டி. ரவி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி போட்டியிடும் 234 தொகுதிகளில் வெற்றி பெறப் பாடுபடுவோம். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தொடரும். தமிழகம் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 20 தொகுதிகள் கிடைத்துள்ளன. ஓரிரு நாட்களில் பாஜக போட்டியிடும் தொகுதிகளை அறிவிப்போம்.
தமிழ் நாட்டுக்கு ரூ.6 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி அளித்துள்ளார். தமிழகத்தின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டுக்கு திமுக – காங்கிரஸ் கட்சிகள் தான் தடை விதித்தன; அவை தமிழகத்தின் எதிரிகளாவர். ஜல்லிட்டுக்கு தடை விதித்தது காங்கிரஸ் அரசு அதனை மீட்டு தந்தது பாஜக அரசு.
தமிழ் மொழியையும், தமிழ்க் கலாச்சாரத்தையும் பாதுகாத்து வரும் பாரதிய ஜனதா கட்சி, தமிழகத்தின் நண்பனாக திகழ்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எளிமையானவர், அவர் மிகவும் ராசியானவர் என்பதால் மீண்டும் முதல்வர் ஆவார். தமிழகத்தில் தாமரையோடு, இரட்டை இலை சின்னமும், மாம்பழ சின்னமும் எங்களுடையது தான் என்ற எண்ணத்தோடு பணியாற்றுகிறோம் என்று கூறினார்.





