அடடே, இதுதான் திமுக! ஸ்டாலின், உதயநிதியை நேர்காணல் செய்த துரைமுருகன்!!
தலைவராக இருந்தாலும் நேர்காணலில் பங்கேற்றுவிட்டுத்தான் வேட்பாளராக அறிவிக்க முடியும் என்பதை திமுக வெளிப்படுத்தும் வகையில், விருப்ப மனு அளித்திருந்த திமுக தலைவர் ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஆகியோரிடம் துரைமுருகன் இன்று நேர்காணல் நடத்தினார்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் வரும் 12ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது; மார்ச் 19ம் ஆம் தேதி மனுதாக்கலுக்கு கடைசி நாளாகும். திமுக சார்பில், 2021 சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் போட்டியிட விருப்பமனு பெறப்பட்டது. அவ்வாறு விருப்ப மனு அளித்தவர்களிடம், திமுக தேர்தல் குழு கடந்த 2-ம் தேதி முதல் நடத்தி வந்த நேர்காணல், இன்றுடன் நிறைவடைந்துள்ளது.
நேர்காணலின் கடைசி நாளான இன்று திமுக தலைவர் ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஆகியோரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு. ஆ. ராசா, பொன்முடி உள்ளிட்டோர் அடங்கிய குழு, ஸ்டாலினிடம் கலந்தாய்வு நடத்தியது.

சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதர்காக, ஸ்டாலின் சார்பில் விருப்பமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவரை தவிர திமுக சார்பில் வேறு யாரும் அங்கு போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்யவில்லை.
எனவே, வரும் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் மீண்டும் ஸ்டாலின் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. கடந்த 2011, 2016 சட்டசபைத் தேர்தலில் இதே தொகுதியில் தான், போட்டியிட்டு வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், திமுக சார்பில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுவதற்கு, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விருப்பமனு அளித்திருந்திருந்தார். சென்னை மாவட்டத்துக்கான வேட்பாளர் நேர்காணலில் இன்று கலந்து கொண்டார். அவரிடம் ஸ்டாலின் உள்ளிட்டோர் கொண்ட குழு நேர்காணல் நடத்தியது.
திமுகவில் உட்கட்சி ஜனநாயகம் உள்ளது என்பதை காட்டிக் கொள்ளும் வகையில், கட்சியின் தலைவரே ஆனாலும் நேர்காணலில் பங்கேற்றாக வேண்டும்; அதன் பிறகே வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்பதை வெளிப்படுத்தும் வகையில், இத்தகைய நேர்காணலை திமுக நடத்துவது வழக்கம். அக்கட்சியின் இச்செயலை பலரும் பாராட்டியுள்ளனர்.





