அதிமுகவில் தினகரன் சேர்க்கப்படுவாரா? அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்!
அதிமுகவின் சசிகலா அல்லது டிடிவி தினகரனை சேர்த்துக் கொள்வதற்கு, 100% வாய்ப்பே இல்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் பாஜகவுடன் தொகுதிப் பங்கீடு செய்து கொள்வதில் இன்னமும் உடன்பாடு எட்டப்படவில்லை. இதற்கு காரணம், அதிமுக கூட்டணியிக்குள் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை இணைக்க வேண்டும் என்று பாஜக அழுத்தம் கொடுத்து வருவதாக செய்திகள் வெளியாகின. இந்த தகவல், அதிமுக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், இந்த விவகாரம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
வரும் சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணி 234 தொகுதிகளிலும் அமோகமாக வெற்றி பெறும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் அதிமுகவில் இருந்த எழுச்சியை இப்போதும் மக்கள் மத்தியில் காண முடிகிறது. அதிமுகவின் உள்கட்சி விவகாரங்களில் பாஜக தலையிடுவதாக கூறுவது தவறு; அவ்வாறு எதுவும் இல்லை. இது தொடர்பாக பெரிய அளவுக்கு வதந்தியை கிளப்பிவிடுகிறார்கள்.
அதிமுகவை பொறுத்தளவில் கொள்கை என்பது வேறு, கூட்டணி என்பது வேறு. எங்களது கூட்டணியில் பாஜக ஒரு அங்கம் அவ்வள்வுதான். எங்கள் தலைமையில் அவர்கள் இருக்கின்றார்கள். எங்கள் கட்சியின் உள்விவகாரத்தில் பாஜக தலையிடாமல்தான் இருக்கிறது. அதிமுகவிற்கு என்று கொள்கை, லட்சியம் இருக்கிறது. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக நடக்கிறது.
முதல்வர் பழனிச்சாமி கூறியது போல், அமமுகவோ டிடிவி தினகரன் மற்றும் சசிகலா அதிமுகவில் இணைவதற்கான எந்த சத்தியமும் இல்லை. அவர்களை சேர்ப்பதற்கு 100 சதவீதம் வாய்ப்பே இல்லை. இதுதான் உறுதியான நிலை. இதில் எந்த மாற்றமும் கிடையாது. தனது தலைமையில்தான் கூட்டணி என்று டிடிவி தினகரன் கூறியிருப்பது, நகைச்சுவையாக உள்ளது. அவரது பேச்சை மக்கள் நகைச்சுவையாகத்தான் பார்க்கிறார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.





