வரும் 30ஆம் தேதி தமிழகம் வரும் நட்டா..!
பாரதிய ஜனதா தேசிய தலைவர் ஜேபி நட்டா வரும் 30ஆம் தேதி தமிழகம் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பொங்கல் திருநாளன்று தமிழகம் வந்த அவர் அன்று பாரதிய ஜனதா சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார்.
இதை தொடர்ந்து டெல்லி திரும்பிய அவர் வரும் 29ஆம் தேதி புதுச்சேரி செல்லவுள்ளார். சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில் புதுச்சேரிக்கு செல்லும் ஜேபி நட்டா அந்த கட்சியை பலப்படுத்தும் பணிகளை முடுக்கி விடப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் ஜேபி நட்டா முன்னிலையில் பிற கட்சிகளை சேர்ந்த சில முக்கிய பிரமுகர்கள் பாரதிய ஜனதாவில் இணைய உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் புதுச்சேரி பயணத்தை முடித்துக் கொண்டு மறுநாள் 30-ஆம் தேதி அவர் தமிழகம் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தேர்தலையொட்டி தமிழகம் வரும் ஜேபி நட்டா 234 தொகுதிகளில் அமைப்பாளர்கள், பொறுப்பாளர்கள் கலந்து கொள்ளும் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக தமிழகம் வருவது முக்கியத்துவம் பெற்றுள்ளது.







