கோவை துடியலூரை அடுத்த பன்னிமடை அருகே காட்டு யானை தாக்கி முதியவர் பலி.வேலை முடிந்து சைக்கிளில் வீடு சென்ற போது பரிதாபம் !!!
கோவை தடாகம் பகுதியைச் சேர்ந்தவர் சோமசுந்தரம்.இவர் பன்னிமடை அருகே உள்ள ஒரு ஹாலோ பிளாக் கல் தயாரிக்கும் கம்பெனியில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.இந்நிலையில் நேற்று இரவு வேலை முடிந்து சோமசுந்தரம் தனது சைக்கிளில் வரப்பாளையம் வழியாக தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது,அவ்வழியாக எதிரே வந்த ஒற்றைக் காட்டு யானை சைக்கிளை கீழே தள்ளி சோமசுந்தரத்தை தாக்கி தூக்கி வீசியதுடன் காலால் மிதித்துள்ளது.இதில் சம்பவ இடத்திலேயே சோமசுந்தரம் பரிதாபமாக பலியானார்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர் சோமசுந்தரத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அங்கு சுற்றிக்கொண்டிருந்த காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியினை மேற்கொண்டனர்.
பன்னிமடை, தடாகம், வீரபாண்டி, மாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகளால் மனிதர்கள் தாக்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது. எனவே,காட்டு யானைகள் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் வராமல் தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.







