அரியர் தேர்வு தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் இன்று விசாரணை..!
அரியர் வைத்துள்ள கல்லூரி மாணவர்களுக்கு தேர்வை ரத்து செய்து தேர்ச்சி வழங்கும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.
அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கும் தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அரியர் தேர்வு ரத்து என்பது பல்கலைக்கழக மானியக்குழு விதிகளுக்கு முரணானது என தெரிவித்தது.
தமிழக உயர்கல்வித்துறை செயலாளர் தாக்கல் செய்த மனுவில் கொரொனா பாதிப்பின் காரணமாக மாணவர் சமுதாயமே எதிர்பாராத வகையில் பாதிக்கப்பட்டதாகவும் மன உளைச்சல் உளவியல் ரீதியான பாதிப்புகளுக்கு மாணவர்கள் ஆளாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகளுக்கு முரணாக எந்த உத்தரவும் இல்லை என்று தெரிவித்த தமிழக உயர்கல்வித்துறை பல்கலைக்கழகங்களுக்கு உள்ள அதிகாரத்தின் அடிப்படையில் இந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு இருப்பதால் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணையை காணொளி முறையில் இருநூற்றுக்கும் அதிகமான மாணவர்கள், வழக்கறிஞர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். அப்போது நீதிபதிகள், வழக்கறிஞர்கள் அறிவுறுத்திய பின்னரும் மாணவர்களிடையே அமைதியின்மை காணப்பட்டதால் விசாரணையை நீதிபதிகள் நிறுத்தினார்.
இந்த நிலையில் அரியர் தேர்வு தொடர்பான வழக்குகள் இன்று மீண்டும் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.







