அரசு பேருந்து பொது போக்குவரத்து சேவை மீண்டும் தொடக்கம்..!
நிவர் புயல் கரையை கடந்ததை தொடர்ந்து ஏழு மாவட்டங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்து பொது போக்குவரத்து சேவையை மீண்டும் தொடங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று அதி தீவிர புயலாக மாறிய நிவர் புயல் புதுச்சேரி – மரக்காணம் இடையே இன்று கரையை கடந்தது.
நிவர் புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவாரூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய 7 மாவட்டங்களில் கடந்த 24ஆம் தேதி மதியம் ஒரு மணியுடன் பொது போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது.
மேலும் அந்த ஏழு மாவட்டங்களிலும் உள்ளூர் பேருந்து போக்குவரத்தும் தடைசெய்யப்பட்டது. இந்நிலையில் நிவர் புயல் இன்று கரையை கடந்ததை தொடர்ந்து பொது போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்ட ஏழு மாவட்டங்களிலும் பேருந்து சேவையை தொடங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையில் 7 மாவட்டங்களிலும் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.







