தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு : இன்று 2516 பேருக்கு தொற்று உறுதி… 35 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் தொடர்ந்து 5-வது நாளாக தினசரி கொரோனா தொற்று பாதிப்பு 3 ஆயிரத்திற்கும் கீழாக குறைந்துள்ளது. இன்று 2516 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியான நிலையில், 35 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தினசரி கொரோனா பாதிப்பு மடமடவென சரிந்து வருகிறது. 81 நாட்களாக தொடர்ந்து 5 ஆயிரத்திற்கும் மேலாக பதிவாகி வந்த நிலையில், காந்த 15 நாட்களுக்கும் மேலாக மளமளவென சரிந்து வருகிறது.தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 2516 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்து16 ஆயிரத்து 751 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் உயிரிழப்பு 35 ஆக பதிவான நிலையில் மொத்த உயிரிழப்பு 11 ஆயிரத்தை கடந்து 11,018 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3859 ஆகும். இதன் மூலம் இதுவரையிலும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6,79,377 ஆக அதிகரித்துள்ளது. இன்னும் 26,356 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு மேலும் குறைந்து 668 பேருக்கு மட்டும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 9வது நாளாக ஆயிரத்திற்கும் கீழாக கொரோனா பாதிப்பு பதிவாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.







