கோவை பெரியதாடாகம் பகுதியில் உள்ள செங்கல் சூளைகள் மற்றும் செங்கல் சூளை உரிமையாளர் வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட 25 இடங்களில் ஜி.எஸ்.டி துறையினர் அதிரடி சோதனை !!!
கோவை சின்னத்தடாகம், பெரியதடாகம், மாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான செங்கல் சூளைகள் இயங்கி வருகின்றன. இங்கு தயாரிக்கப்படும் செங்கல்கள் தமிழகம்,கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இங்குள்ள செங்கல் சூளைகளில் இருந்து விற்பனை செய்யப்படும் செங்கற்களுக்கு உரிய ஜி.எஸ்.டி. வரி செலுத்தப்படுவதில்லை என புகார்கள் எழுந்து வந்தன.

இதையடுத்து இன்று சோமையனூர், சின்னத்தடாகம், பெரியதடாகம், சாய்பாபா கோவில், கவுண்டம்பாளையம் உள்ளிட்ட 25 இடங்களில் ஜி.எஸ்.டி. துறையினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் பெரியதடாகம் பகுதியில் உள்ள கே.கே.ஜி. சேம்பர், விஷ்ணு சேம்பர், மணி சேம்பர்,சோமையனூர் பகுதியில் உள்ள வி.கே.வி. பெட்ரோல் பங்க், செங்கல் சூளைகள், கவுண்டம்பாளையம், சாய்பாபா கோவில் உள்ளிட்ட இடங்களில் உள்ள செங்கல் சூளை உரிமையாளர் வீடுகள் என 25 இடங்களில் சோதனைகள் நடைபெற்று வருகின்றது.

6 மணி நேரத்திற்கு மேலாக நீடித்து வரும் இச்சோதனைகள் முடிவடைய இன்னும் சில மணி நேரம் ஆகும் என தெரிகிறது. சோதனையில் முறைகேடுகள் கண்டுபிடிக்கபட்டால் உரிமையாளர்களிடம் அபராதத்துடன் ஜி.எஸ்.டி. வரி வசூலிக்கப்படும் என தெரிகிறது.






