தமிழகத்தில் இன்று 4,549 பேருக்கு கொரோனா உறுதி… 2 நாளில் குணமடைந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்து சாதனை
தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 4549 ஆகவும், 69 பேர் பலியானதாகவும் தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள பட்டியலில் கூறப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கு ஆளாகி குணமடைந்தோர் எண்ணிக்கை இன்றும் 5 ஆயிரத்தை கடந்த நிலையில் 2 நாட்களில் மட்டும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதும் சாதனையாக பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் தினசரி கொரோனா நிலவரம் தொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,549பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,157 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் மொத்த பாதிப்பு 1,56,369 ஆக உயர்ந்துள்ளது.
சென்னைக்கு அடுத்த படியாக திருவள்ளூரில் இன்று 526 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது. அடுத்தபடியாக மதுரை 267, வேலூர் 25 3 , திருவண்ணாமலை 2 12, செங்கல்பட்டு 179, குமரி 14 6, தூத்துக்குடி 171, நெல்லை 130, திண்டுக்கல் 126 என பாதிப்பு பதிவாகியுள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 69 பேர் பலியாகி உள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 2,236ஆக உயர்ந்துள்ளது. நேற்று சிகிச்சை முடிந்து குணமானவர்களின் எண்ணிக்கை 5000 என பதிவான நிலையில் 2வது நாளாக இன்றும் 5 ஆயிரத்தை கடந்து 5,106 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதனால் 2 நாளில் மட்டும் குணமடைந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்த நிலையில், இதுவரை குணமானவர்களின் எண்ணிக்கை 1,07,416 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகம் முழுவதும் இன்று அதிகபட்சமாக 45,888 மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதுவரை மாநிலம் முழுவதும் 17.82 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.






