ஐஸ்வர்யா ராய் மற்றும் குழந்தைக்கு கொரொனா உறுதியான நிலையில் அமிதாப் வெளியிட்டுள்ள வீடியோ..!
கொரோனா வைரஸ் பாதிப்பால் யாரும் அச்சமடையத் தேவையில்லை என்றும், இந்த நிலை விரைவில் மாறும் என்றும் நடிகர் அமிதாப்பச்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மருத்துவர்கள், செவிலியர் மற்றும் மருத்துவ பணியாளர்கள் கடவுளின் மறு உருவம் என்றும் அவர் கூறியுள்ளார். பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யாவுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவருக்கு கொரொனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் தொற்று உறுதியான நிலையில் அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குடும்பத்தினருக்கு கொரொனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனுக்கும் தொற்று உறுதியானது.
அவர்களது வீடு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட நிலையில், அபிஷேக் பச்சனின் மனைவியும், பிரபல நடிகையுமான ஐஸ்வர்யா ராய் மற்றும் அவர்களது மகள் ஆராத்யாவுக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சனுக்கு தொற்று இல்லை என பரிசோதனை முடிவு வெளியாகியுள்ளது.
அவர்களது மகள் ஸ்வேதா, நந்தாவும் தனது 2 குழந்தைகளுடன் அமிதாப்பச்சன் வீட்டில் வசித்து வந்துள்ளார். அவர்கள் மூவருக்கும் தொற்று இல்லை என கொரொனா பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது. அமிதாப் குடும்பத்தினர் விரைவில் குணமடைய அவரது ரசிகர்கள் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர்.







