சாத்தான்குளம் சம்பவத்தில் அதிரடி திருப்பம் : 6 போலீஸ்காரர்கள் மீது கொலை வழக்குப் பதிவு…!எஸ்.ஐ.ரகு கணேஷ் கைது!!
சாத்தான்குளத்தில் தந்தை, மகனான ஜெயராஜ் – பென்னிக்ஸ் ஆகியோர் சித்ரவதை செய்யப்பட்டு உயிர் பறிக்கப்பட்ட சம்பவத்தில் 6 போலீஸ்காரர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்ட முதற்கட்டமாக எஸ்.ஐ.ரகு கணேஷ் கைது செய்யப்பட்டார். மற்றவர்களையும் கைது செய்யும் பணியில் சிபிசிஐடி போலீசார் தீவிரம் காட்டி வருவதால் இந்த வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

சாத்தான்குளத்தில் ஜெயராஜ் – பென்னிக்ஸ் ஆகிய இருவரும் போலீசால் கைது செய்யப்பட்டு, 48 மணி நேர கொடூர சித்ரவதை செய்யப்பட்டதில் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த இருவரின் மரணத்திற்கு நீதி கேட்டும், சித்ரவதை செய்த கொடூர காக்கிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்யக் கோரியும் போராட்டங்கள், கண்டனக் குரல்கள் எழுந்தன. இதனால் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது.

ஆனால் இந்த வழக்கில் தாமாக முன் வந்து விசாரனைக்கு எடுத்துக் கொண்ட உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நேற்று அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தது. இந்த வழக்கை உடனடியாக கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும். சிபிஐ விசாரணைக்கு தாமதமாகும் என்பதால் ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல், உடனடியாக சிபிசிஐடி போலீசார் விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவை பிறப்பித்தது. விசாரணை அதிகாரியாக சிபிசிஐடி டிாஸ்டி அனில்குமாரும் நியமிக்கப்பட்டார்.
“இதனால் நேற்று மாலையே சிபிசிஐடி போலீசார் களத்தில் குதித்தனர். விசாரணையும் விறு விறுப்படைந்த நிலையில், முதலில் இன்று காலை ஜெயராஜ் – பென்னிக்ஸ் ஆகியோர் உயிரிழப்பு தொடர்பாக, அரசு பாதுகாப்பில் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டது”!

தொடர்ந்து இன்று சாத்தான்குளத்தில் சிபிசிஐடி ஐ.ஜி.சங்கர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் விசாரணையை துரிதப்படுத்தினர். இதன் தொடர்பாக இன்று இரவு தந்தை – மகன் ஜெயராஜ் _ பென்னிக்ஸ் இருவரின் உயிரிழப்பு வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. இதில் சாத்தான்குளம் எஸ்.ஐ.ரகு கணேஷ் உள்ளிட்ட 6 போலீஸ்காரர்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு 302 உள்ளிட்ட 4 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
“இந்த சித்ரவதை படுகொலையின் சூத்ரதாரியான ரகு சுணேஷை சிபிசிஐடி போலீசார் அதிரடியாக கைதும் செய்தனர். தொடர்ந்து மற்றவர்களையும் கைது செய்ய சிபிசிஐடி போலீசார் தீவிரம் காட்டி வருவதால் சாத்தான்குளம் வழக்கில் அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகிறது.”






