போலீஸ் எஸ்.ஐ மனைவிக்கு கொரோனா பாதிப்பு எதிரொலி… திருப்பூர் வடக்கு காவல் நிலையம் மூடப்பட்டதால் பரபரப்பு!!
திருப்பூர் வடக்கு காவல் நிலைய எஸ்.ஐ.யின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், காவல் நிலையம் மூடப்பட்டு கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணி நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளரின் மனைவி சென்னை நகர காவல் துறையில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். சில நாட்களுக்கு முன் சென்னையில் இருந்து திருப்பூர் வந்த பெண் உதவி ஆய்வாளருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவரது கணவரான திருப்பூர் வடக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

மேலும் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ள நிலையில் முன்னெச்சரிக்கையாக காவல் நிலையம் மூடப்பட்டது. மேலும் காவல் நிலையம் முழுவதும் மற்றும் அதன் சுற்றுப் பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யும் பணியும் மேற்கொள்ளப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.







