ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் 25 லட்சம் நிதியுதவி!
கோவில்பட்டி கிளை சிறையில் உயிரிழந்த சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் அறிவித்துள்ளனர்.
அதிமுக சார்பாக ஓ பன்னீர்செல்வம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதில் சாத்தான்குளம் சம்பவத்தில் மரணமடைந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக 25 லட்சம் ரூபாய்குடும்ப நல நிதியுதவியாக வழங்கப்படும் என்று கூறியுள்ளனர்.

சாத்தான்குளம் காவல் துறையினரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட போது ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் மரணமடைந்தது துயர நிகழ்வாகவும், துரதிஸ்டவசமாகவும், மிகுந்த மன வேதனை அளிப்பதாகவும் அதில் கூறியுள்ளனர்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இது போன்ற சம்பவங்களை ஒருபோதும் அனுமதிக்காது என்றும் குடும்பத்தில் தூண்களாக இருந்த இருவரையும் இழந்து வாடும் குடும்பத்திற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட குடும்பத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.






